வறுமையால் படிப்பை தொடரமுடியாத முதல் ரேங்க் மாணவி
ஈரோடு: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றும் வறுமையின் காரணமாக உயர்கல்வி பெற முடியாமல் தவித்து வருகிறார் வனிதா என்ற பெண்.
ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் வனிதா (24).
வறுமையின் காரணமாக படிக்க வைக்க முடியாமல் இவருக்கு தர்மபுரி அருகே கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.
ஆனால் திருமணம் ஆன மூன்று வருடத்திலேயே மூளை காய்ச்சல் ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக ஏழுமலை இறந்து போனார்.
இதனால் வனிதா மீண்டும் தனது தந்தை வீட்டுக்குத் திரும்பினார். படிப்பில் அதிக ஆர்வம் உடைய வனிதா தொடர்ந்து படிக்க விரும்பினார். இதையடுத்து, சேலம் அரசு சேவை இல்லப் பள்ளியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார்.
பிள்ஸ் டூ பொதுத் தேர்வில் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் பேஷன் டிசைனிங் பாட பிரிவில் 1071 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிரியர் ஆவதே தனது லட்சியம் என வனிதா கூறுகிறார். ஆனால் உயர் கல்வி பெற தேவையான பணம் இல்லாதாதல் படிப்பை தொடர முடியாமல் வனிதா தவித்து வருகிறார்.