மணல்குவாரி ஏல முடிவை அரசு கைவிட ராமதாஸ் கோரிக்கை
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2003ம் ஆண்டுக்கு முன்பு டெண்டர் மற்றும் ஏல முறை அமலில் இருந்தது. இந்த முறையின்போது, ஏலதாரர்கள் விதிமுறைகளை முற்றிலுமாக மீறிவிட்டனர். மணல்வளங்களைக் கண்மூடித்தனமாகச் அவர்கள் சுரண்டியதால் ஆறுகளை மீண்டும் சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுவிட்டன.
ஏலதாரர்கள் பின்பற்றிய பேராசைத்தனமான கொள்ளையடிக்கும் நடைமுறைகள், இயற்கைச்சூழல் பாழாவதற்கும், நிலத்தடி நீர்வளம் குறைவதற்கும், தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் பயிர் விளைச்சல் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது.
சட்டத்துக்குப் புறம்பாக மணல் விலையை அளவுக்கு மீறி உயர்த்தி பணம் பறித்தனர். இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் கட்டுமானப் பணிகளுக்குப் பாதிப்பும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டன.
மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுக்கும் பணியைப் பரவலாக்கப் போவதாக அரசு அறிவித்திருந்தது. அதற்கு அருகிலும் பரவலாகக் 'குழி' பறிக்க அனுமதிக்கப் போகிறார்கள் என்று பொருள்.
இப்படி பரவலாக 'குழி' பறித்து மணல் ஆதாரத்தை அள்ளிச் சென்றால், குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும் என்று அரசு எப்படி நம்புகிறது? மக்களும் நம்ப வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறது? இப்படியெல்லாம் கேட்டால், 'கூட இருந்தே குழி பறிப்போர்' என்ற பழிச்சொல் பாய்ந்து வரும்.
மக்கள் நலன்கருதியும், மாநிலத்தின் வளம் கருதியும் ஆற்றுப் படுகைகளில் தனியாரை மீண்டும் பரவலாகக் 'குழி' பறிக்க அனுமதிக்காதீர் என்று குரல் எழுப்புவதில் இருந்து எத்தகைய பழிச்சொல்லும் திசை திருப்பி விட முடியாது. இப்படியெல்லாம் குரல் எழுப்புவது குற்றம் என்று கருதுவதில்லை.
எனவே, என் நெஞ்சம் இதற்காக குறுகுறுக்கப் போவதில்லை. குற்றமுள்ள நெஞ்சோடு அல்ல; தவறை தவறு என்று சுட்டிக்காட்டும் நெஞ்சத்தோடு இந்த முடிவை அரசு கைவிடவேண்டும் என்றும் எத்தகைய முறைகேடுகளுக்கும் இடம் தராமல் மணல் எடுப்பதையும், விற்பதையும் அரசே தொடர்ந்து மேற்கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.