காவல் நிலையத்திற்கு பின்புறம் சாராய பாக்கெட்டுக்களின் குவியல்!
பெங்களூர்: கர்நாடகத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் மடிந்துள்ள நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குப் பின்புறம் நூற்றுக்கணக்கான சாராய பாக்கெட்டுக்களைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கர்நாடகத்திலும், தமிழகத்திலும், கள்ளச்சாராயத்தை அருந்திய ஆண்கள், பெண்கள் என 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் 127 பேர் மடிந்துள்ளனர்.
கோலார், பெங்களூர், பெங்களூர் புறநகர் மாவட்டங்களில் கள்ளச்சாராய பலி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கள்ளச்சாராய ஒழிப்பில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூர், பிரேசர் டவுன் காவல் நிலையத்திற்குப் பின்புறம் 400 சாராய பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குப் பின்புறமே சாராய பாக்கெட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் போலீஸாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூர் அர்பன் துணை ஆணையர் சாதிக் கூறுகையில், பிரேசர் டவுன் காவல் நிலையம் பின்புறம் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத கிணற்றில் 400 சாராய பாக்கெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கள்ளச்சாராய பாக்கெட்டுக்கள் ஆகும்.
இன்னொரு சம்பவத்தில், பாகலூர் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கள்ளச்சாராய பாக்கெட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பிரேசர் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கே.ஜி. ஹள்ளி பகுதியில்தான் கள்ளச்சாராயத்திற்கு 60 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.