180 உயிர்கள் பலி-விஷச் சாராயம் விற்ற ஏஜென்ட்-மனைவி கைது
பெங்களூர்: தமிழகத்திலும், கர்நாடகத்திலும் 180க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த, விஷச் சாராயத்தை விற்ற முக்கியக் குற்றவாளி செளந்தரை போலீஸார் கைது செய்துள்ளனர். உடன் அவரது மனைவியையும் பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இன்று வரை இடைவிடாமல் தினசரி சராசரியாக 20 பேர் வரை மடிந்து கொண்டு வருகின்றனர் தமிழகத்திலும், கர்நாடகத்திலும். இத்தனைக்கும் காரணம் கர்நாடக மாநிலத்தில் விற்கப்பட்ட விஷத்தன்மை வாய்ந்த கள்ளச்சாராயம்.
இதுவரை 189 பேர் விஷச் சாராயத்திற்கு உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த விஷச்சாராயத்தை விற்பனைக்கு விட்ட முக்கியக் குற்றவாளி செளந்தர் என பெங்களூர் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் செளந்தர் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமையை தலைமறைவாகி விட்டார்.
அவரை பல்வேறு தனிப்படைகள் அமைத்து பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் செளந்தரும், அவரது மனைவியும் நாமக்கல்லில் வைத்து பெங்களூர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
செளந்தரை பெங்களூருக்குப் போலீஸார் அழைத்து வருகின்றனர். இவர் தனது கூட்டாளிகள் மூலம் தமிழக, கர்நாடக எல்லைக் கிராமங்களில் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளார். இதுதவிர கர்நாடக கிராமங்கள், குடிசைப்பகுதிகளிலும் செளந்தர்தான் ஒட்டுமொத்தமாக கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளார்.
செளந்தரிடம் நடத்தப்படும் விசாரணையில் அவரது கள்ளச்சாராய சாம்ராஜ்யம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள், இதன் பின்னணியில் உள்ள பெரும்புள்ளிகள் குறித்த விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே கள்ளச்சாராய விற்பனையைக் கண்காணித்துத் தடுக்கத் தவறியதற்காக கர்நாடகத்தில் 9 போலீஸார், 12 கலால்துறையினர் உள்ளிட்ட 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஷச் சாராயத்திற்கு இதுவரை இரு மாநிலங்களிலும் மொத்தம் 189 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் 33 பேர் இறந்துள்ளனர். இங்கு நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. புதிதாக யாரும் இறக்கவில்லை. 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.