மணல் ஏலம்: 'அரசியல் தூசி'-கண் கசக்கும் திமுக
சென்னை: மணல் குவாரி ஏலம் விடும் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகள் பகிரங்கமாக விமர்சித்து வருவதால் திமுக அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மணல் குவாரிகள் முன்பு தனியாருக்கு டெண்டர் மூலமும், ஏலம் விட்டும் ஒப்படைக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இவை ரத்து செய்யப்பட்டு அரசே குவாரிகளை ஏற்று நடத்த ஆரம்பித்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் இது தொடர்ந்தது. ஆனால் தற்போது இந்த முறையை நீக்கி விட்டு மீண்டும் டெண்டர், ஏல முறைக்கு திமுக அரசு திரும்பியுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களே ஏலம் விடலாம், டெண்டர் விடலாம் என அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
ஜெ. கண்டனம்:
இதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். இதன் மூலம் முறைகேடுகள் அதிகரிக்கும், அரசுக்கு வருவாய் குறையும் என அவர் குறை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையால் திமுககாரர்களுக்குத்தான் முழு பலனும் கிடைக்கும்.
கடந்த 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் மணல் விற்பனை மூலம் ரூ. 64.08 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மணல் குவாரிகளை அரசே ஏற்றுக் கொண்ட பின்னர், 2001-06 காலகட்டத்தில், மணல் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் ரூ. 320.98 கோடியாகும். இது திமுக அரசில் கிடைத்த வருவாயை விட 5 மடங்கு அதிகமாகும்.
திமுக அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இதனால் முறைகேடுகள் ஏற்படும். மேலும் அரசின் வருவாயும் பெருமளவில் குறையும். எனவே இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், திமுக கூட்டணிக் கட்சிகளான பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசின் முடிவுக்கு கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸும், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜனும், அரசின் இந்த திடீர் முடிவுக்கு பின்னணி என்ன என்று கேட்டுள்ளனர்.
பொன்முடி விளக்கம்:
இதற்கிடையே, டாக்டர் ராமதாஸின் விமர்சனத்திற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள நடைமுறையில் பாமக குற்றம் கண்டுபிடித்துக் கூறிய பின்னர்தான், பழைய முறைக்கு மாற அரசு முடிவு செய்தது.
கடந்த 2 ஆண்டுகளில் பாமக, மணல் விற்பனை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறது. தற்போது பழைய முறைக்குப் போகும் முடிவையும் அது விமர்சிக்கிறது.
தனியாரிடம் ஒப்படைப்பதையும் பாமக குறை கூறுகிறது. அரசு வசம் இருப்பதையும் குறை கூறி வருகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஏன் இந்த கொள்கை முடிவை அரசு எடுக்கவில்லை என்று ராமதாஸ் கேட்கிறார். புதிய நடைமுறை ஜூலை மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. அதற்குள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும், அதில் இந்த புதிய முடிவுக்கு ஒப்புதல் பெறப்படும் என்பதை ராமதாஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சரவை கூடும்போது, நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ள யோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும். மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவும் கருத்தில் கொள்ளப்படும்.
மணல் குவாரிகளில் எந்தவித முறைகேடும் நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ளும். அதில் அரசு உறுதியாக உள்ளது. அதை மனதில் கொண்டுதான் தனியாரிடம் குவாரிகளை ஒப்படைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.