ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் கலசம் பெயர்ந்து விழுந்தது
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் சன்னதி முன் அமைந்துள்ள 41 அடி உயர நான்கு அடுக்கு ராஜகோபுரத்தின் மீதுள்ள கலசங்கள் சுண்ணாம்புக் கலவையால் செய்யப்பட்டவை. இந்த கோபுரம் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரை சின்னமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ராஜகோபுரத்தின் மீதுள்ள ஐந்து கலசங்களில் வடக்குபுறமுள்ள கலசம் மே 18ம் தேதி மதியம் 1.30 மணியளவில் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. ஆனால் கோயிலின் மேல்தளத்தில் இந்த கலசம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடுமையான வெயிலில் சுண்ணாம்பு பூச்சில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கலசம் பெயர்ந்து விழுந்ததாக கோயில் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் தெரிவிக்கையில், பழமையான இந்த கோபுரத்தில் இருந்து ஒரு கலசம் கீழே விழுந்தது. கலசத்துக்கு சேதமில்லை. இன்னும் 4 நாட்களில் கலசத்தை மீண்டும் பொருத்தி விடுவோம் என்றார்.