பலிகள்: விஷச் சாராய முக்கிய சப்ளையர் மர்மச் சாவு
பெங்களூர்: தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 200க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கிய விஷச்சாராயத்தை சப்ளை செய்தவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி சௌந்தரராஜன். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பலரது உயிரைக் குடித்த விஷச்சாராயத்தை விற்றவர். இந்த வழக்கு தொடர்பாக சௌந்தரராஜன், அவரது மனைவி சத்யா, மருமகள் ரேகா ஆகியோரை போலீசார் நேற்று (மே 22) கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விஷச்சாராயத்தை அவர்களுக்கு சப்ளை செய்தது யார் என்ற விவரம் அம்பலமானது. பெங்களூர் ஊரக மாவட்டம் கட்டிகெனஹள்ளியை சேர்ந்த முஸ்து என்ற முஸ்டாக் என்பவர்தான் இந்த கொலைகார விஷச்சாராயத்தை சப்ளை செய்த ஏஜெண்ட்.
கடந்த மே 17ம் தேதியன்று சௌந்தரராஜனுக்கு 500 பாக்கெட் கள்ளச்சாராயத்தை முஸ்டாக் சப்ளை செய்துள்ளார். அவற்றை டி.ஜே.ஹள்ளி பகுதியி்ல் தொழிலாளர்களுக்கு சௌந்தரராஜன் விற்றுள்ளார். மே 18ம் தேதியன்று மட்டும் 450 பாக்கெட்டுகளை சௌந்தரராஜன், அவரது மனைவி, மருமகள் ஆகியோர் விற்றுள்ளனர்.
இந்த பாக்கெட்டுகளில்தான் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷத்தன்மை கொண்ட மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. இதை வாங்கிக் குடித்த பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர். பலருக்கு பார்வை பறிபோனது.
இந்த நிலையில் சௌந்தரராஜன் அளித்த தகவலின்பேரில் கட்டிகெனஹள்ளியில் உள்ள முஸ்டாக் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார் முஸ்டாக்.
அவர் விற்ற விஷச்சாராயத்தை குடித்து ஏராளமானவர்கள் பலியானதை கேள்விப்பட்டு பயந்துபோய் விஷம் அருந்தி முஸ்டாக் தற்கொலை செய்திருக்கலாம் என்று பெங்களூர் போலீஸ் குற்றப்பிரிவு இணை ஆணையர் கோபால் ஹொசூர் தெரிவித்தார்.