'ராமர் பாலம்': ஜூன் 15ல் சாதுக்கள் கூட்டம்
சென்னை: ராமர் பாலம் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என்று விஸ்வ இந்து பரிஷத் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் அறிவித்துள்ளார்.
சென்னையில் அசோக் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடுமுழுவதும் உள்ள மக்கள் ராமர் பாலம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் ராமர் பாலம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறவேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளவர்களும் ராமர் பாலத்தின் மீது பல நூற்றாண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் இந்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி நடத்தியது பற்றிய ஆராய்ச்சிகள் பற்றி தெரிவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில், தொல்லியல்துறை சார்பில் முன்பு தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில், ராமர் என்ற மனிதர் இருந்திருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறுவதை ஏற்க முடியாது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் தோரியம் கனிம வளம்தான் அழிந்துபோகும்.
ராமர் பாலம் பிரச்னை தொடர்பாக விவாதிக்க ஹரித்துவாரில் வரும் ஜூன் 15, 16 தேதிகளில் துறவிகள் மாநாடு நடத்தப்படுகிறது. ராமர் பாலம் ஆதரவு இயக்கத்துக்கு ஆதரவாக 50,000 பேரை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் இந்த , போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து துறவிகள் மாநாட்டி்ல் முக்கிய முடிவு எடுக்கப்படும்.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக மத்திய அரசு அறிவி்ககும்வரை விஎச்பியின் போராட்டம் ஓயப் போவதில்லை என்றார்.