கார்த்திக் புதுக் கட்சி?- முக்கிய ஆலோசனை
சென்னை: பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள நடிகர் கார்த்திக் இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை இன்று அவர் வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தார் கார்த்திக். கட்சியை வளர்க்க சரிவர செயல்படுவதில்லை, நிர்வாகிகளை மதிப்பதில்லை தொண்டர்களை சந்திப்பதில்லை என்று அடுக்கடுக்காக கார்த்திக் மீது எதிர் கோஷ்டியினர் மேலிடத்திற்குப் புகார்களை அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் நடந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து கார்த்திக் விரைவில் புதுக் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் கார்த்திக் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை தேவிஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் தனது ரசிகர் மன்ற மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
கூட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகியிடமும் தனித் தனியாக கருத்து கேட்கிறார் கார்த்திக். அதன் பின்னர் புதிய கட்சி தொடங்குவது குறித்த முடிவை அவர் எடுத்து அறிவிப்பார். இன்று மாலைக்குள் புதுக் கட்சி தொடர்பான அறிவிப்பை கார்த்திக் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலை 'லேப்டாபில்' கவனிக்கிறேன்:
இந் நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
ஆரம்பத்திலிருந்தே எனக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தனர். இப்போது அவர்களது நோக்கம் நிறைவேறி விட்டது.
நான் அரசியலை விட்டு ஓடி விடுவேன் என அவர்கள் நினைக்கிறார்கள். அதுதான் நடக்காது. நான் எங்கும் போக மாட்டேன். தொடர்ந்து அரசியலில் இருப்பேன். மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டியுள்ளது.
மக்கள் என் மீது பாசம் வைத்துள்ளனர். அவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். விரைவில் புதுக் கட்சி தொடங்குவேன். அந்தக் கட்சியை தனித்து நடத்துவது சுலபமல்ல. எனவே திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பேன். எம்.பி. தேர்தலில் ஒரு சீட் கேட்பேன்.
அரசியலை விட்டு நான் ஒதுங்கியிருக்கவில்லை. லேப்டாப்பில் உலக அரசியலை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் பார்வையிலிருந்து எதுவுமே தப்பாது என்று 'ஏதேதோ' கூறியுள்ளார் கார்த்திக்.
'லெட்டர் பேட்' அரசியல் கட்சிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், கார்த்திக் லேட்டஸ்டாக 'லேப்டாப்' அரசியலை அறிமுகப்படுத்தியுள்ளார்.