ரிடையர்ட் போலீஸ் அதிகாரிகளுக்கு நோ 'ஆர்டர்லி'
சென்னை: ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் போலீஸாரை (ஆர்டர்லி) திரும்பப் பெற அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பல காலமாகவே போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆர்டர்லி என்று பெயர். அதிகாரிகள் வீட்டுப் பணிகளை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
முன்பு முதல்வராக கருணாநிதி இருந்த போது திமுக ஆட்சியில் இந்த ஆர்டர்லி முறைக்கு வேட்டு வைக்கப்பட்டது. இருந்தாலும் ஆர்டர்லி முறையை வேறு ரூபத்தில் உயர் அதிகாரிகள் கடைப்பிடித்து வந்தனர்.
இந்தப் பணிகளில் பெரும்பாலும் ஆயுதப் படை போலீஸார்தான் ஈடுபடுத்தப்படுவர். பணியில் இருக்கும் அதிகாரிகள் தவிர ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளிலும் கூட ஆர்டர்லிகள் என்ற ெபயரில் கடை நிலை போலீஸார் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை நகரில் மட்டும் 600 ஆர்டர்லி போலீஸார் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு அதிகாரியின் வீட்டில் சராசரியாக 6 போலீஸார் ஆர்டர்லியாக பயன்படுத்தப்படுகின்றனர். வீட்டு வேலைகள் செய்வது, கடைகளுக்குப் போவது, கார் ஓட்டுவது உள்ளிட்ட வேலைகள் இவர்களை வைத்து வாங்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக உள்ள போலீஸாரை உடனடியாக திரும்பப் பெற அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார். இதன் நகல் டிஜிபி ஜெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், டிஐஜிகள், மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதை டிஜிபி ஜெயின் அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை நகரில் வசிக்கும் முன்னாள் டிஜிபிக்களின் வீடுகளில்தான் கணிசமான அளவிலான போலீஸார் ஆர்டர்லிகளாக உள்ளனர். சமீபத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் 2 போலீஸார் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், முன்னாள் டிஜிபிக்கள் வைகுந்த், ஸ்ரீபால் ஆகியோரது வீடுகளில் போலீஸார் யாரும் வேலை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த உத்தரவால், ஆர்டர்லிகளாக உள்ள போலீஸார் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.