அடுத்த முதல்வர் எதியூரப்பா தான்-வெங்கையா நாயுடு
டெல்லி: கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக எதியூரப்பாவே பதவியேற்பார் என பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
இன்று நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் முதன் முறையாக தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தங்களது கட்சியி்ன் சார்பில் எதியூரப்பாவே முதல்வராவார் என வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். முன்னதாக எதியூரப்பாவின் எதிர் கோஷ்டியை சேர்ந்தவரான அனந்தகுமார் தரப்பு, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று செய்தியைப் பரப்பியது.
ஆனால், எதியூரப்பா தான் முதல்வர் என பாஜக தலைமை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இது குறித்து நாயுடு கூறுகையில், எதியூரப்பா தான் அடுத்த முதல்வர். இதில் குழப்பம் ஏதுமில்லை. இந்த வெற்றியின் மூலம் தென்னகத்தில் பாஜகவுக்கு நுழைவு வாயில் திறந்துள்ளது என்றார்.
இதற்கிடையே தங்களை ஆட்சியமைக்க உடனே அழைக்க வேண்டும் என ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூருக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம் நாட்டில் 7 மாநிலங்களில் பாஜக தனியாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.