மண்டபம் அருகே டெட்டனேட்டர் மூட்டை!
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளி பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த டெட்டனேட்டர் மூட்டையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது இலங்கைக்குக் கடத்தப்படவிருந்ததா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டபம் அருகே உள்ள கடலோர கிராமம் உச்சிப்புளி. இங்குள்ள பேருந்து நிலையத்தில், ஒரு சாக்கு மூட்டை கேட்பாரற்றுக் கிடந்தது. இதையடுத்து போலீஸார் விைரந்து வந்தனர். மூட்டையைக் கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில், டெட்டனேட்டர்கள் இருப்பது தெரிய வந்து அதிர்ந்தனர்.
400 சாதாரண டெட்டனேட்டர்கள், 752 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் அதில் இருந்தன. இவை தனித் தனியாக சிறு சிறு சாக்குப் பைகளில் போட்டு கட்டி, உள்ளே போடப்பட்டிருந்தன.
இது இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதை இங்கு போட்டுச் சென்றவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.