பாஜகவுக்கு 6 சுயேச்சைகளும் ஆதரவு!!
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக 110 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 28 இடங்களும் கிடைத்துள்ளன. சுயேச்சைகளுக்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
பாஜக ஆட்சி அமைக்க 3 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டனர். இதில் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 சுயேச்சைகள் நேற்று காலை முதலி்ல் ஆதரவு தெரிவித்தனர். இந் நிலையில் மற்ற இரு காங்கிரஸ் சுயேச்சைகளும் நேற்றிரவு ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களது விவரம்: எம்.எல்.ஏக்கள் வெங்கடரமணப்பா (பவகதா), சுதாகர் (ஹிரியூர்), நரேந்திரசாமி (மலவள்ளி), கூலிஹட்டி சேகர் (ஒசதுர்கா), சிவராஜ் தங்கடாகி (கனககிரி).
இந் நிலையில் மிச்சமிருந்த ஒரே ஒரு சுயேச்சையான ஒரத்தூர் பிரகாஷ் இன்று காலை பாஜகவுக்கு ஆதரவு தெரிவி்த்தார். இவர் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராவார். கோலார் மாவட்டத்துக்கு காவிரி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவர் விதித்துள்ளார்.
முன்னதாக நேற்று மாலை பிரகாஷ் தவிர்த்த மற்ற 5 சுயேச்சைகளுடன் பாஜக தலைவர்கள் அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, எதியூரப்பா, சதானந்த கெளடா உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்தனர்.
அப்போது தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரி எதியூரப்பா ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். மேலும் ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்களை ஆளுநரிடம் அறிமுகப்படுத்தி அவர்கள் தன்னை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று எதியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.
அதேபோல தற்போது கர்நாடகத்தில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கும் அவர் கடிதம் எழுதவுள்ளார். இதையடுத்து நாளை அல்லது மறுதினம் எதியூரப்பா தலைமையிலான அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது.