ரஷ்ய சரக்கு விமானம் நொறுங்கி விழுந்து 9 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யநாட்டு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததில் அதில் இருந்த விமானி உள்ளிட்ட 9 ஊழியர்களும் உடல் சிதறி பலியாயினர்.
ரஷ்யாவை சேர்ந்த மாஸ்கோவியா ஏர் கேரியர்ஸ் என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான ஏஎன்-12 ரக சரக்கு விமானம் ஒன்று சிலியாபின்ஸ் நகரில் இருந்து பெர்ம் நகருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 9 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
தரையில் இருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. விமானியின் அறைக்குள் கரும்புகை சூழ்வதால் அவசரமாக விமானத்தைத் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று மாயமானது. ராடாரில் அந்த விமானத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து விமானத்தை கண்டுபிடிக்க மீட்புப்பணியினர் விரைந்தனர்.
இந்நிலையில் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 6.30 மணியளவில் சிலியாபின்ஸ் விமான நிலையத்துக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் அந்த விமானம் விழுந்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த விமானி உள்பட 9 ஊழியர்களும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் கோளாறு ஏற்பட்டு பின்னர் தீப்பிடித்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தரையிறங்கும் முயற்சியில் உயர் அழுத்த மின் கம்பி மீது விமானம் உரசியதால் வெடித்து சிதறியிருக்கலாம் என்றும் மீட்புப்படை அதிகாரி தெரிவித்தார்.
விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்துள்ளதால் விபத்துக்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரும் என்று ரஷ்ய நாட்டு விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.