மலேசியா-'டாப் 40' கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3 தமிழர்கள்!
மேலும் ஒரு இந்திய வம்சாவளி தொழிலதிபரும் இந்த டாப் 40ல் இடம் பிடித்துள்ளார்.
புகழ் பெற்ற போர்ப்ஸ் இதழ் மலேசியாவின் 40 பெரும் பணக்காரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். அஸ்ட்ரோ டிவி அதிபரும், ஏர் செல் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரருமான டி.அனந்தகிருஷ்ணன் 2வது பெரும் பணக்காரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அனந்தகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 30 ஆயிரத்து 240 கோடியாகும். அனந்தகிருஷ்ணன் இலங்கையைச் சேர்ந்த தமிழர்.
இந்தியாவின் ஏர் செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகள் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்திடம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவிலேயே மிகப் பெரிய தொலைபேசி நிறுவனம் மேக்ஸிஸ் ஆகும். அனந்தகிருஷ்ணன் தென் கிழக்கு ஆசியாவின் 3வது மிகப் பெரும் பணக்காரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.
லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் கோலாலம்பூர் புறநகரான பிரிக்பீல்ட் பகுதியில் 1938ம் ஆண்டு பிறந்தவர் அனந்தகிருஷ்ணன். இவரது பெற்றோர்களுக்கு யாழ்ப்பாணம் தான் பூர்வீகமாகும்.
பிரிக்பீல்டில் உள்ள விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில்தான் படித்தார் அனந்தகிருஷ்ணன். பள்ளிப் படிப்பை கோலாலம்பூரில் முடித்த பின்னர் பட்டப் படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்தார் அனந்தகிருஷ்ணன். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்துள்ளார்.
மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய அனந்தகிருஷ்ணன், விளம்பரங்களை அறவே விரும்பாதவர். தன்னை எதிலும் முன்னிலைப்படுத்த விரும்பாத எளிமையான மனிதரும் கூட என்பது வியப்புக்குரியது.
வினோத் சேகர் - 16வது இடம்:
இந்தப் பட்டியலில் 16வது இடத்தில் இருக்கிறார் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த வினோத் சேகர். இவரது சொத்து மதிப்பு ரூ. 1,344 கோடியாகும்.
38 வயதாகும் வினோத் சேகர், பெட்ரோ குழுமத்தின் தலைவர் ஆவார். இந்த நிறுவனத்தில், போர்ப்ஸ் இதழின் துணைத் தலைவரான கிறிஸ்டோபர் போர்ப்ஸ் ஒரு பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேகரின் தந்தை மலேசிய அரசு ரப்பர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
29வது இடத்தில் ஞானலிங்கம்:
இந்தப் பட்டியலில் 29வது இடத்தில் தமிழரான ஞானலிங்கம் இடம் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 215 மில்லியன் டாலராகும்.
மலேசியாவின் மிகப் பெரிய தனியார் துறைமுகமான வெஸ்ட்ஸ்போர்ட்ஸின் உரிமையாளர் ஞானலிங்கம். 1994ம் ஆண்டு இதை நிறுவினார். பென்சில் தயாரிக்கும் நிறுவனமான பெலிகான் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் கூட.
காசி. பழனியப்பன்:
இப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவரும் ஒரு தமிழரே. அவரது பெயர் காசி பழனியப்பன். முன்னாள் ஆர்க்கிடெக்ட் ஆன இவர் , பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவரது சொத்து மதிப்பு 127 மில்லியன் டாலராகும்.
எம்.கே.லேண்ட் என்கிற நிறுவனத்தின் அதிபர். கடந்த ஓராண்டில் இவரது நிறுவனம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பங்குகளின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் மலேசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பழனியப்பனும் இணைந்துள்ளார்.