எஸ்சி, எஸ்டியினருக்கு தனி வங்கி தொடங்க மத்திய அரசு திட்டம்
டெல்லி: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கென பிரத்யேக வங்கியை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விவசாயத் துறைக்கும், கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் கடன் வழங்குவதற்காக நபார்டு வங்கி (தேசிய விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி) துவக்கப்பட்டது.
அந்த வரிசையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் தேவையான கடனுதவிகளை வழங்குவதற்காக பிரத்யேக வங்கி ஒன்றை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், நலிவடைந்த மக்களுக்காக தற்போது செயல்பட்டு வரும் ஆறு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து அந்தக் கழகங்களின் தலைவர்களுடன் திட்ட கமிஷன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி விட்டது.
இக்கழகங்கள் மூலம் நலிவடைந்த மக்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளிக்கின்றன. இருப்பினும் நிதியுதவிக்கு அரசுகளை சார்ந்திருப்பது, கொடுத்த கடன்களில் பெரும்பகுதி திரும்ப வராதது, தன்னாட்சி அதிகாரம் இல்லாதது போன்ற காரணங்களால், இக்கழகங்களால் சிறப்பான வகையில் செயல்பட முடியவில்லை.
அதனால், இந்த ஆறு கழகங்களையும் படிப்படியாக ஒன்றிணைத்து அதை எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்காகச் செயல்படும் முழுமையான வங்கியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி, சந்தையில் இருந்து மூலதனத்தை திரட்டி, தலித்துகளுக்கு சிறப்பான சேவையை அளிக்கும்.
இதேபோல் இதர பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் உடல் ஊனமுற்றோர் போன்றோருக்காகவும் பிரத்யேக வங்கிகள் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.