ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு - 30ம் தேதி எதியூரப்பா பதவியேற்பு
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 110 இடங்களில் வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 80 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகளுக்கு 6 தொகுதிகள் கிடைத்தன.
ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 3 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதற்காக சுயேச்சைகளை பாஜக தரப்பு அணுகியது. அதில் முதலில் 3 பேர் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மேலும் 2 பேர் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். கடைசியில் 6 சுயேச்சைகளும் பாஜகவுக்கு ஆதரவாகத் திரும்பினார். இதனால் அறுதிப் பெரும்பான்மை பலம் பாஜகவுக்குக் கிடைத்தது.
இந்த நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி எதியூரப்பா ஆளுநர் தாக்கூரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து நேற்று இரவு வரை எந்தத் தகவலும் இல்லை. இதையடுத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை குடியரசுத் தலைவருக்கு எதியூரப்பா அனுப்பி வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு எதியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் முறைப்படி அழைத்தார். மேலும் கர்நாடகத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து பாஜக ஆட்சி அமைப்பதற்கு இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகியுள்ளன. இதைத் தொடர்ந்து 30ம் தேதி எதியூரப்பா முதல்வராகப் பதவியேற்கிறார்.
பதவியேற்பு விழா விதான செளதா முன்புறம் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கா பந்தல் அமைக்கும் பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
எதியூரப்பாவுடன் சில அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. எதியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பது இது 2வது முறையாகும். சில மாதங்களுக்கு முன்பு மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவுடன் முதல்வர் பதவியை ஏற்ற அவர் ஒரே வாரத்தில் தனது பதவியை இழக்க நேரிட்டது நினைவிருக்கலாம்.