எடியூரப்பாவுடன் 17 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு
பெங்களூர்: 17 அமைச்சர்களுடன் கர்நாடக முதல்வராக பி.எஸ்.எதியூரப்பா நாளை பதவியேற்கவுள்ளார்.
கர்நாடகத்தில் சுயேச்சைகள் ஆறு பேரின் உதவியுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. நாளை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விதான செளதா முன்பு இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
நாளை முதல்வராகப் பதவியேற்கும் எதியூரப்பாவுடன் 17 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மூத்த தலைவரான ஈஸ்வரப்பா, சங்கரமூர்த்தி, வி.எஸ்.ஆச்சார்யா ஆகியோர் அமைச்சர்களாகக் கூடும்.
பெல்லாரி எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டிக்கு துணை முதல்வர் பதவி போகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்தான், சுயேச்சை எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சிகளை முன்னின்று நடத்தியவராம்.
இதுதவிர இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் தர எதியூரப்பா திட்டமிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளும் கணிசமான அளவில் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் எதியூரப்பா பேசுகையில், அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது தேசியத் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர்தான் இறுதி செய்யப்படும்.
அமைச்சரவையில் இனம், ஜாதி, பிராந்தியம், அனுபவம், இளமை, பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றார்.
பாஜக பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தையும் நேற்று எதியூரப்பா பார்வையிட்டு போலீஸாருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
கார்கே காங். தலைவர்:
இதற்கிடையே, கர்நாடக காங்கிரஸ் சட்டசபைத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்தது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பிருத்விராஜ் செளகான் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
நாள் முழுவதும் நடந்த கூட்டத்தின் இறுதியில், மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை சித்தராமய்யா முன்மொழிய, டி.கே.சிவக்குமார் வழிமொழிந்தார்.
இந்த நிலையில் கார்கே தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது கடிதத்தை சோனியா காந்தியிடம் நேற்று முன்தினம் வழங்கினார். இதையடுத்து புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று செளகான் தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபைக்கு 9வது முறையாக கார்கே தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.