பெட்ரோல்-முடிவெடுக்காமல் கலைந்த அமைச்சர்கள்
நேற்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் பங்கேற்றார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயையை இறக்குமதி செய்ய நிதி இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என தியோரா தெரிவித்தார்.
நஷ்டம் லட்சக்கணக்கான கோடிகளை எட்டிவிட்டதால் இனியும் பெட்ரோலிய நிறுவனங்களால் சமாளிக்க முடியாது, நிதி திரட்டவும் வேறு வழியில்லை. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்படும் என தியோரா தெரிவித்தார்.
பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் ஜூலை வரை மட்டும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய நிதி உள்ளது. இந்தியன் ஆயில் கொஞ்சம் பரவாயில்லை. அதனிடம் செப்டம்பர் வரை இறக்குமதி செய்ய நிதியுள்ளது.
அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்த நிறுவனங்களிடம் நிதியே இல்லாத நிலை ஏற்படும்.
பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஜூலை முதல் இறக்குமதியை நிறுத்திவிட்டால் நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்த விவரங்களை முரளி தியோரா கூட்டத்தில் எடுத்து வைத்தார்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும், விலையை உயர்த்த வேண்டும் என்று அவர் கோரினார்.
ஆனால், வரியைக் குறைத்தால் நாட்டின் வரி வசூலில் பெரும் பின்னடைவு ஏற்படும். அதை சமாளிக்க முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தினால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும், அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என சிதம்பரம் விளக்கினார்.
இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இந்தக் கூட்டம் பாதியிலேயே நின்றது. இந் நிலையில் இந்தக் கூட்டம் இன்று மீண்டும் நடக்கலாம் எனத் தெரிகிறது.