'சைகோ' வதந்தி-அரசுக்கு விஜய்காந்த் கோரிக்கை
கடலூர்: கடலூர் மாவட்ட முந்திரிக் காடுகளில் அடையாளம் தெரியாத கொலை வெறிக் கும்பல் தங்கியிருப்பதாக பெரும் பீதி நிலவுகிறது. அந்த கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்வதோடு, இது குறித்த வதந்திகளையும் தடுக்க வேண்டும் என விஜய்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேமுதிக தலைவரான விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, கம்பாபுரம் பகுதிகளிலும் அந்தப் பகுதிகளிலுள்ள முந்திரிக் காடுகளிலும் அடையாளம் தெரியாத கொலை வெறிக் கும்பல் தங்கியிருப்பதாகவும்,
இரவு நேரங்களில் ஊர்களில் புகுந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும், இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்தும் மக்களிடையே கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தந்த ஊரிலுள்ள இளைஞர்கள் ஆயுதங்களுடன் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் இரவு நேரங்களில் ரோந்து வருகின்றனர். இளம் பெண்கள் வீட்டுக்குள் வைத்து பூட்டப்படுகின்றனர். வெளியில் தாய்மார்களும் ஆயுதங்களுடனும், தீப்பந்தங்களுடனும் இரவு முழுவதும் கண்விழித்து காவல் காக்கின்றனர். இந்த நிலை இன்னும் தொடர்ந்து நீடிக்கிறது.
சந்தேகத்திற்கு இடமானவர்களை பொது மக்களே பிடித்துக்கொண்டு போய் காவல்நிலையத்தில் ஒப்படைத்தால், அவர்களுக்கு மொழி தெரியவில்லை, பைத்தியம் என்று சொல்லி விட்டுவிடுகின்றனர் என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
ஆளைக் காட்டுகிறோம் வாருங்கள் என்று காவலர்களை மக்கள் அழைத்தால், போலீஸ் நிலையத்தில் போதுமான ஆட்கள் இல்லை என்று கூறி போலீசார் வர மறுக்கின்றனர் என்று தெரிவிக்கின்றார்கள்.
காவல்துறையை பொருத்தவரையில் வதந்தியை பரப்ப வேண்டாமென்றும், வழக்குகளை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியிருக்கிறோம் என்றும் அறிக்கை விடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையை பலப்படுத்தி அந்த கிராமங்களில் இரவு, பகலாக போலீசார் ரோந்து சென்றால் சந்தேகத்திற்குரியவர்களையும் கைது செய்யலாம், வதந்தியை தடுக்கலாம்.
விலைவாசி உயர்வால் வேதனை ஒரு புறம், இரவு நேரங்களில் மின்சாரத்திற்கு பஞ்சம். இதனால் கிரிமினல்களுக்கு நல்ல வேட்டை. இதை தடுத்து நிறுத்த இரவு முழுவதும் கண்விழிப்பதால், ஏழைகள் பகலில் கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை.
இந்த வேதனைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என்று கேட்டுள்ளார் விஜய்காந்த்.