அகன்றது முடியரசு-குடியரசானது நேபாளம்
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்டது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டம் வெடித்தது. மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக அங்கு ஜனநாயகம் மலர்ந்தது.
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட மாவோயிஸ்ட்டுகள் தேர்தலில் பங்கேற்றனர். ஆட்சியையும் பிடித்துள்ளனர்.
நேற்று நேபாள நாடாளுமன்றத்தின் (தேசிய அரசியல் நிர்ணய சபை) முதல் கூட்டம் நடந்தது. எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாக பிரகடனம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு குடும்பத்துடன் வெளியேற 15 நாள் அவகாசம் கொடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 560 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்தனர். நேற்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 601 உறுப்பினர்களில் 565 பேர் கலந்து கொண்டனர். இன்னும் 26 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, குடியரசாக நேபாளம் பிரகடனம் செய்யப்பட்டதை தலைநகர் காத்மாண்டுவில் பொதுமக்கள் நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தலைநகர் மட்டுமல்லாது நாட்டின் இதர பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தீர்மானத்தை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா சார்பில் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலா கொண்டு வந்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் மூலம் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்துள்ளது. நேபாளத்தின் கடைசி மன்னர் பெயர் ஞானேந்திராவுக்குக் கிடைத்துள்ளது.