தட்டச்சர் பணி-சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு
சென்னை: தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
கிறித்துவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தலா 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து 15.9.2007 அன்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் விரைவில் களையப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மாநில நிர்வாக சீர்திருத்தக் குழுத் தலைவர் நீதியரசர் ராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மு. காசி விஸ்வநாதன்,
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் ஸ்ரீதர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைச் செயலாளர் வாசு தேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வின் மூலம் நடத்தப்பட்ட தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு தலா 3.5 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்க ஏதுவாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.