பண வீக்கம் 8.1% ஆக உயர்வு-ப.சி. கவலை
பண வீக்க விகிதம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பண வீக்கமும் உயர்ந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில், மே 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்க விகிதம் 7.82 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இது மிக அதிகமாகும்.
பணவீக்கம் 8.1 சதவீதமாக உயர்ந்திருப்பது குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் சிதம்பரம் பேசுகையில், இது கவலை தரும் விஷயம். பணவீக்கத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு எளிமையான வழிகள் எதுவும் இல்லை. இருப்பினும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிகளை கண்டுபிடித்தாக வேண்டும் என்றார்.
இதற்கிடையே, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு குறித்து முடிவு செய்ய இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தில் விலை உயர்வு முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை 3 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. காஸ் சிலிண்டர்களின் விலையும் கூட்டப்படவுள்ளதாக தெரிகிறது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 20 வரை விலை உயர்வு இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.