ஐபிஎல் தொடரில் கலக்கும் இடது கை ஆட்டக்காரர்கள்
சென்னை: ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் இடது கை ஆட்டக்காரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது.
இந்திய பிரிமீயர் லீக்கின் முதலாவது டுவென்டி 20 தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து ஆட்டங்களுமே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டிகளில் இளம் வீரர்கள் பலரின் திறமை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களுக்குப் போட்டியாக பல வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுகத்தி கலக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இடது கை ஆட்டக்காரர்களே ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் சரி, பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் சரி, இடது கை ஆட்டக்காரர்களே கலக்கியுள்ளனர்.
முதல் ஐந்து இடத்தில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே இடது கை ஆட்டக்காரர்கள்தான்.
கெளதம் காம்பீர் 523 ரன்களுடன் உள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 86 ஆகும். ஸ்டிரைக்கிங் ரேட் 143.68 ஆகும். பேட்டிங் சராசரி 43.58 ஆகும்.
முதலிடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் மார்ஷ். முன்னாள் வீரர் ஜெப் மார்ஷின் பையன் இவர். இவர்கள் தவிர சனத் ஜெயசூர்யாவும் ரன்களைப் பொழிந்து ரணகளமாக்கியுள்ளார் போட்டிகளை. ஜெயசூர்யா 31 சிக்சர்களை விளாசி தொடரிலேயே அதிக சிக்சர்கள் அடித்த வீரராகவும் திகழ்கிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 115 ரன்களைக் குவித்தும் பிரமிக்க வைத்தார் ஜெயசூர்யா.
இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணியும் சற்றே விறுவிறுப்பான ஆட்டத்தைக் காட்டினார். அவரது அணியின் மாத்யூ ஹெய்டனும் விளாசித் தள்ளியுள்ளார். தனி நபராக ஆரம்ப கட்டப் போட்டிகளை சென்னை அணிக்காக வென்றவர் ஹெய்டன். ஆனால் திடீரென ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போனதால் சில போட்டிகளை சென்னை இழக்க நேரிட்டது.
அதேபோல ஆடம் கில்கிறைஸ்ட்டும் பொறி பறக்க ஆட்டத்தைக் காட்டினார். இருப்பினும் இவரது ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அமையவில்லை என்பது துரதிர்ஷ்டவசமே. இவர் 13 போட்டிகளில் ஆடி 431 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு செஞ்சுரியும் அடங்கும்.
இதேபோல இடது கை ஆட்டக்காரர்களான சுரேஷ் ரெய்னா, கிரீம் ஸ்மித், அல்பி மார்க்கல் ஆகியோரும் முத்திரை பதித்துள்ளனர்.
தேறாமல் போன சச்சின், டிராவிட், கங்குலி:
அதேசமயம் இந்திய கிரிக்கெட்டின் மும்மூர்த்திகளான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி ஆகியோர் இப்போட்டித் தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. மூவரும் தலைமை தாங்கிய அணிகள் அரை இறுதிக்கும் முன்னேறவில்லை.
அதிலும் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கப் போட்டிகளில் ஆடவில்லை. அவர் ஆட வந்த பிறகும் கூட அவரைத் தவிர மற்றவர்கள்தான் சிறப்பாக ஆடினர். ஓரிரு போட்டிகளில் சச்சின் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ரன்களை எடுத்தார்.
சச்சின் (மும்பை இந்தியன்ஸ்), கங்குலி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ராகுல் டிராவிட் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்) ஆகியோர் அவரவர் அணியின் முத்திரை வீரர்களாக ஐபிஎல்லால் அறிவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மூவருமே சொல்லி வைத்தாற் போல முத்திரை பதிக்கத் தவறி விட்டனர்.
மூவருமே நல்ல பிட்னஸில் இல்ைல என்பதையே இது வெளிக்காட்டுவதாக உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர். இவர்களுக்குப் பதில் இந்திய அணியில் இடம் பிடிக்க பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இந்தப் போட்டியில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.