பஸ்-லாரி இடையே சிக்கிய கார்: 4 பேர் பலி
பெருந்துறை: பெருந்துறை அருகே இன்று காலை பஸ், லாரிக்கு இடையே கார் சிக்கி அப்பளமானது. காரில் பயணித்த இரு பெண்கள், குழந்தை உள்பட 4 பேர் பலியாயினர்.
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது.
நாமக்கல்லில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவை சென்று கொண்டிருந்தது.
பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில் பஸ்சை ஒரு கார் முந்திச் செல்ல முயன்றது. ஆனால், அதற்குள் லாரியும் மிக அருகே வந்துவிட்டது.
இதையடுத்து லாரியிடம் இருந்து தப்ப காரை டிரைவர் இடதுபுறம் திருப்பியபோது பஸ்சின் பக்கவாட்டில் கார் மோதியது. இதைத் தொடர்ந்து கார் மீது லாரியும் மோதியது. பஸ்-லாரிக்கு இடையே சிக்கிய கார் அப்பளமானது.
இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள், ஒரு குழந்தை மற்றும் காரை ஓட்டி வந்தவர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அவர்களது பெயர் விபரம் உடனடியாகத் தெரியவில்லை.
இந்த விபத்தில் பஸ் பயணிகள் 15 பேரும் காயமடைந்துள்ளனர்.