கலர் டிவி வாங்கியதில் ஊழல்: உயர் அதிகாரி டிஸ்மிஸ்
சென்னை: கலர் டிவி வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளாட்சித் துறை அதிகாரி ஜெயபாலகிருஷ்ணன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மண்டலப் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராகப் பணிபுரிந்து வந்தவர் பி.ஜெயபாலகிருஷ்ணன். அவர் கோவை மாவட்ட கலெக்டரின் பஞ்சாயத்துப் பிரிவு நேர்முக உதவியாளராக 1994-96-ம் ஆண்டு பணிபுரிந்துள்ளார்.
அப்போது கலர் டி.வி.க்கள் வாங்க கூடுதல் எண்ணிக்கைக்கான ஆணை பிறப்பிப்பதற்காக லஞ்சம் கேட்டு வாங்கிய விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் சஸ்பெண்ட் நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோட்டை சேர்ந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் விநியோகஸ்தர் ஒருவர் பொள்ளாச்சி கோட்டத்தின், கோட்ட தொழில்நுட்ப உதவியாளராக இருந்த கோபிகிருஷ்ணா என்பவரின் மூலம் நடந்த பரிவர்த்தனையில் ஜெயபாலகிருஷ்ணனுக்கு லஞ்சத் தொகையை அவருடைய சிங்காநல்லூர் வீட்டில் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
ஜெயபாலகிருஷ்ணன் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நடந்த தீவிர விசாரணையில் அவை உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அவரைப் பணியிலிருந்து நீக்கம் செய்ய தன்னுடைய ஒப்புதலை வழங்கியது.
இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பி.ஜெயபாலகிருஷ்ணனை 29.5.2008 அன்று உடனடியாகப் பணியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்து ஆணை பிறப்பித்தது.
இணை இயக்குநர் நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகப் பணி நீக்கம் நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை ஊழல் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.