கள்ளச் சாராய வழக்குகள் கர்நாடவிற்கு மாற்றம்
மதுரை: ஒசூர் அருகே நடந்த சாராய சாவுகள் குறித்த வழக்குகள் கர்நாடகாவிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக மது விலக்கு கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தென் மாவட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், ஷியாம் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சாராய சாவுகளில் தமிழகத்தை சேர்ந்த 45 பேரும், கர்நாடகத்தை சேர்ந்த 123 பேரும் பலியானார்கள். இது சம்பந்தமாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு வழக்கு மட்டுமே தமிழகத்தை சேர்ந்தது. மீதி உள்ள 20 வழக்குகளும் கர்நாடகாவை சேர்ந்தவை. இதனால் இந்த வழக்குகள் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 3 மாத பெண் குழந்தையும், 4 மாத கர்பிணியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு கூட கள்ளச் சாராயம் கொடுக்கும் அளவு படிப்பறிவு இன்றி அந்த பகுதி மக்கள் உள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் இருக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், ஆசிரியர்கள் முன் வரவேண்டும்.
கள்ளச் சாரயம் விற்பவர்கள், கடத்துபவர்கள் பற்றி பொது மக்கள் போலீசாருக்கு 044 - 25 38 44 49 என்ற எண்ணில் தகவல் தரலாம்.
இந்த தகவல் ரகசியமாக வைக்கபடும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.