மும்பை: ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் புரட்டி எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். இன்றைய இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை மோதுகிறது. முதலாவது ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இதில், வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாகவே இருந்தது. ஆனால் பஞ்சாப் அணியை புரட்டி எடுத்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் வீரர்கள், சென்னையின் அனல் வேக பந்து வீச்சில் வேகமாகவே சுருண்டனர். 8 ரன்களே பஞ்சாப் எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டாக ஹோப்ஸ் 2 ரன்களில் வீழ்ந்தார். அவர் போன சில நிமிடங்களிலேயே சங்கக்காரா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இரு விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ் 23 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்திற்கு வழிவகுத்துக் கொண்டிருந்தபோது மக்காயா டினியின் பந்தில் வீழ்ந்தார். மக்காயா டினி, கோனி ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியவண்ணம் இருந்தனர். யுவராஜ் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெயவர்த்தனே 8 ரன்களும், இர்பான் பதான் 3 ரன்களும் எடுத்து வெளியேறினர். மோட்டா வந்த பிறகுதான் அவுட் ஆகும் வேகம் தடைபட்டது. சற்று நிலைத்து ஆடிய மோட்டா 26 பந்துகளில் 25 ரன்களைக் குவித்தார். அவருடன் ரமேஷ் பவாரும் சற்று சிறப்பாக ஆடினார். இவர்தான் அணியின் ஸ்கோர் 100ஐ எட்ட உதவினார். சிறப்பாக ஆடிய இவர் 21 பந்துகளில் 28 ரன்களில் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சில கேட்சுகளையும், பீல்டிங்கில் சில கோட்டைகளையும் விட்டதால், பஞ்சாப் அணி 100 ரன்களை எட்ட முடிந்தது. இறுதியில், 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களை எடுத்தது பஞ்சாப். டினி 2, கோனி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி பஞ்சாப் நிலைகுலைவுக்குக் காரணமாக அமைந்தனர். முரளீதரன் ஒரு விக்கெட் எடுத்தார். தொடர்ந்து தனது இன்னிங்ஸைத் தொடங்கியது சென்னை. தொடக்க ஆட்டக்காரரான வித்யூத் சிவராமகிருஷ்ணன் 6 ரன்கள் எடுத்த நிலையில் பதான் பந்தில் வீழ்ந்தார். ஆனால் பார்த்தீவ் படேலும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்து அடித்து நொறுக்கினர். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவே இல்லை. 48 பந்துகளைச் சந்தித்த படேல் 51 ரன்களை எடுத்தார். சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் 55 ரன்களைக் குவித்தார். இதில் நான்கு சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடக்கம். இறுதியில், 14.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 116 ரன்களைக் குவித்து சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆட்ட நாயகனாக மக்காயா டினி தேர்வு செய்யப்பட்டார்.