என்எல்சி தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக்-பதற்றம்
நெய்வேலி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி, பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
இப்பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்ைத நடத்தப்படும் எனவும், அதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவை என்றும் சட்டசபையில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இருப்பினும் ஆற்காடு வீராசாமி கூறிய ஒரு மாத கால அவகாசம் முடிந்த பின்னரும் கூட மத்திய அரசுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதையடுத்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம்சார்பில் இன்று ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
ஆனால் இதுகுறித்து கவலைப்படாத என்.எல்.சி. நிர்வாகம், புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யப் போவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.