For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல்: இனியும் மானியம் முடியாது-பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இனியும் மானியத்தை உயர்த்துவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. உலக விலைவாசி உயர்வு மற்றும் எண்ணெய் விலை உயர்விலிருந்து வாடிக்கையாளர்கள் விலக்கியே வைத்திருப்பதும் சரி வராது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் அசோசம் அமைப்பின் 87வது வருடாந்திர பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், தாராள பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இனியும் மானியத்தை உயர்த்துவதையும், தொடருவதையும் அரசால் தாங்க முடியாது. அதேபோல, உலக அளவில் பெருகி வரும் விலைவாசி உயர்வு மற்றும் எண்ணெய் விலை உயர்விலிருந்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்த விலகியிருப்பதும் இயலாத காரியம்.

தற்போதுள்ள பண வீக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும் இதன் முழுப் பலனும் மெதுவாகத்தான் தெரிய வரும்.

இருப்பினும் வளர்ச்சித் திட்டங்கள் தொய்வடையாமலும், நிலைத்தன்மையுடனும் இருக்க தேவையான நிதிக் கொள்கைகளை அரசு கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

பண வீக்க உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். அதேசமயம், வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. அதேபோல விலைவாசி உயர்வால் நலிவடைந்த பிரிவினர் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை உயர்வால் வளரும் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பும், உடன்பாடும் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால், வறுமைக்கு எதிரான உலகளாவிய போரில் மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஒரு அளவுக்குத்தான் நலிவடைந்த பிரிவினருக்கு அரசு உதவ முடியும். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர முடியும். அதை அரசு செய்தாகி விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மண்ணெண்ணை விலையை அரசு உயர்த்தவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல, சமையல் எரிவாயு மற்றும் டீசல் விலையிலும் பெரிய அளவில் உயர்வு எதுவும் இந்தக் கால கட்டத்தில் இல்லை. ஓரளவே உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் விலையையும் பெரிய அளவில் நாங்கள் உயர்த்தவில்லை. குடிநீர் விநியோகத்திலும் அரசு அதிக கெடுபிடிகளைக் கையாளவில்லை.

ஆனால் இதை இப்படியே தொடர்ந்து நீட்டித்துக் கொண்டிருப்பது இயலாத காரியம். தாராளமான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க அரசியல் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டியது அவசியம்.

பல வளரும் நாடுகளில், அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மேலும், இறக்குமதிக்கான மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கை மிகச் சிறந்தது என்பதை உலக நாடுகள் இன்று அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. பிற வளரும் நாடுகள் மேற்கொண்ட தவறுகளை நாம் செய்யவில்லை. மிகுந்த கவனத்துடன் நமது வளர்ச்சி உள்ளது.

1950 முதல் 80 வரை 3.5 சதவீதமாக நமது வளர்ச்சி விகிதம் இருந்தது. 80 முதல் 2000 வரை இது 5.5. சதவீதமாக உயர்ந்தது. 2004 வரை 9 சதவீதமாக இது உயர்ந்தது. எனவே நமது வளர்ச்சி நிலையானது, ஸ்திரமானது, உறுதியானது என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சிக்கான போட்டியில், ஆசிய முயல்களுக்கு மத்தியில் இந்திய ஆமை வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்றார் மன்மோகன் சிங்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பதையே பிரதமரின் பேச்சு வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X