அங்கீகாரம் இல்லாத கும்பகோணம் பள்ளி மூடல்
கும்பகோணம்: கும்பகோணத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் பள்ளிக்கு புதுப்பித்தல் சான்றிதழ் மறுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், 2004 ம் ஆண்டு ஜூலை மாதம் 16 ம் தேதி ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 94 இளம் சிறார்கள் உயிரோடு கருகி இறந்தனர். இதையடுத்து பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
அங்கு படித்து வந்த 140 மாணவர்கள் ஸ்ரீசரஸ்வதி பாட சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கும்பகோணம் விபத்துக்குப் பின்னர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் அளித்த பரிந்துரையில், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆண்டுதோறும் புதுப்பித்தல் உரிமம் பெற வேண்டும் என்பதும் ஒன்று.
இதே சம்பத் கமிஷன் ஸ்ரீசரஸ்வதி பாடசாலையை ஆய்வு செய்த போது வகுப்பறைக்கு செல்லும் வழி, வெளியேறும் வழி என தனித்தனியாக இல்லை. போதுமான காற்றோட்ட வசதிகள் இல்லை என கூறியிருந்தது.
இதையடுத்து 2008-09 ம் கல்வி ஆண்டுக்காக பள்ளி நிர்வாகத்தினர் கும்பகோணம் தாசில்தார், நகராட்சி ஆணையர், தீயணைப்புத்துறை அலுவலர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு புதுப்பித்தல் சான்று கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பள்ளிக்கு புதுப்பித்தல் சான்று வழங்கப்படவில்லை.
இதையடுத்து கடந்த 12.5.2008 அன்று தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனவாள ராமானுஜம் பள்ளி நிர்வாகத்தினருக்கு உரிய பாதுகாப்பு சான்றுகள் இல்லாமல் கல்வி நிறுவனத்தை தொடங்க கூடாது அவ்வாறு செய்தால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவிட்டிருந்தார்.
இந்தத் தகவல் பள்ளியில் படித்து வரும் 460 மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை. இது தெரியாமல், நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் புதுப்பித்தல் சான்றிதழ் இல்லாததால் பள்ளிக்கு அனுமதி தரப்படவில்லை என்ற அறிவிப்பைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பள்ளியின் கல்விக் குழு, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், 9ம் தேதி மீண்டும் மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பது என்றும், அதுவரை அனைவரும் பொறுமை காப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.