மேல்மலையனூர் கோவிலில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் கோவிலில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நேற்றும் அமாவாசை தினத்தன்று விழா நடந்தது.
இதில், தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில பக்தர்கள் பெருமளவல் கூடியிருந்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் பூஜையைக் காணவும், அம்மனை தரிசிக்கவும் கூடியிருந்தனர்.
ஏராளமான சீரியல் செட் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. அந்த விளக்குகளின் வயர்கள் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத வகையில், தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு விளக்கின் வயர் அறுந்து பக்தர்கள் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். பலர் கூட்ட நெரிசலில் சிக்கி விழுந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சென்னை ராணி (45), பச்சையம்மாள் (40), உத்திரமேரூர் கலியாம்பூண்டி முருகன் (24), திருக்கழுக்குன்றம் ரவி (28) உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை செஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவர்களில் 4 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனை போலீஸார் கொண்டு சென்றனர்.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் நடந்த ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியின்போது 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம் ஒருவர் உயிரிழந்தார்.
இப்படித் தொடர்ந்து இந்தக் கோவிலில் உயிரிழப்புகள் நடந்து வருவதைத் தடுக்க கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எடுக்கத் தவறி விட்டன என்று பக்தர்கள் குமுறலுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக மேல்மலையனூரில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.