என்.எல்.சி பொது மேலாளர் வீடு மீது தாக்குதல்
நெய்வேலி: நெய்வேலி என். எல்.சியின் பொது மேலாளர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் நிலையமான என்எல்சியில் சுமார் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசிடம் பேசுவதாக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது போராடத்தை ஒத்தி வைத்தனர்.
ஆனால் இரண்டு மாதங்களாகியும் பிரச்சனைக்கு தீர்வு காணாததை கண்டித்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் என்.எல்.சியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளார்கள் சிலரை வைத்து பொது மேலாளர் பணிகள் துவக்கியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சில தொழிலார்கள் என்.எல்.சி. பொது மேலாளர் வீரபிரசாத்தின் வீடு மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வீட்டு கதவு, ஜன்னல், கண்ணாடிகள், கேட் பகுதிகள் மற்றும் தோட்டம் ஆகியவை சேதமடைந்தன.
அப்போது வீரபிரசாத் வீட்டில் இல்லை. திருப்பதி சென்றுவிட்டார். இதனால் தாக்குதலில் அவரது குடும்பம் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.