மோத வந்த லாரி-உதவி ஆர்.டி.ஓ உயிர் தப்பினார்
திண்டுக்கல்: திண்டுக்கல் உதவி ஆர்.டி.ஓவை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் உதவி வட்டார போக்குவரத்து அலுவலராக இருப்பவர் செல்வகுமார். இவர் நேற்று இரவு திண்டுக்கல்-கரூர் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த ஓரு லாரியை தடுத்து நிறுத்த முன்றார். ஆனால் அந்த லாரி மிக வேகமாக வந்ததுடன் நிற்காமல் சென்றது. லாரி தன் மீது மோதப் போவதை உணர்ந்த செல்வகுமார் கடைசி வினாடியில் சாலையோரமாக பாய்ந்ததால் உயிர் தப்பினார்.
ஆனால் அவர் அருகே நின்றிருந்த ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் பசீர் அகமதுவின் கை மீது அந்த லாரி படுவேகத்தில் மோதி விட்டுச் சென்றதில் அவரது கை உடைந்து, நசுங்கியது.
மதுரை சாலையில் நிற்காமல் சென்ற லாரியை குறித்து காவல்துறைக்கு தகவல் தந்துவிட்டு ஜீப்பில் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் விரட்டிச் சென்றனர்.
வழியில் ரயில்வே கேட் போடப்பட்டதையடு்த்து அங்கு அந்த லாரி நின்றது.
இதையடுத்து லாரியின் டிரைவரை மடக்கி பிடித்த உதவி ஆர்.டி.ஓ. செல்வகுமார் அவரை தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த வி்ஸ்வநாதன் என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.