ஆண் வாரிசு இருந்தாலும் முதியோர் ஓய்வூதியம்
சென்னை: ஆண் வாரிசு இருப்பவர்களுக்கும், தமிழக அரசின் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 200 ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டு வந்ததை; திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ. 400 ரூபாயாக உயர்த்தியது.
ஆண் வாரிசு இருந்தால் இந்த ஓய்வூதியத் தொகையை பெறுவதற்கு தகுதி இல்லை என்ற நிலையை மாற்றி; ஆண் வாரிசு இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஏழை-ஆதரவற்ற முதியோருக்கு ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும் என சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று ஆண் வாரிசு இருந்தாலும், இல்லாவிட்டாலும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகையை வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்றப கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வைத்த எதிர்க் கட்சியினரையும் நிறைவேற்றிய முதல்வரும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.