நாளை கம்யூனிஸ்ட் பந்த்-பஸ், ரயில்கள் இயங்கும்: ஆட்டோக்கள் ஓடாது
இந்த போராட்டத்துக்கு சிஐடியுவுடன் இணைந்த ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பதால் தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஆட்டோக்கள் ஓடாது.
அதே போல சென்னை கோயம்பேடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோக்களும் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஊழியர் சங்கங்களும் பங்கேற்கவுள்ளனர். ஆனாலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகளின் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பந்த்தில் பங்கேற்கவில்லை.
இதனால் நாளை தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் வழக்கம் போல இயஙகும் எனத் தெகிறது. எந்த பஸ்சும் ரத்து செய்யப்படாது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என சென்னை போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ராம சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பஸ், ரயில் மறியல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆம்னி பஸ்களும் நாளை வழக்கம்போல் ஓடும். அதே போல தமிழ்நாட்டில் எல்லா ரரெயில்களும் வழக்கம் போல் ஓடும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதே போல கடைகளை மூட சொல்லி தகராறு செய்பவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் நாளைய பந்த்தால் இயல்பு வாழ்ககை பாதிக்கப்படாது என்றே தெரிகிறது.
ஜெ-விஜய்காந்துக்கு தா.பாண்டியன் சூடு:
இதற்கிடையே மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்துக் கொண்டே மறுபக்கம் இடதுசாரிகள் பந்த் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறுகையில்,
கேள்வி: மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்து கொண்டு மறுபக்கம் அரசை எதிர்த்து பந்த்' நடத்துவது சரியா?
பதில்: அதுதான் எங்கள் வழி. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். எங்கள் வழி தனி வழி.
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்கள் கட்சி நிலைப்பாட்டை கண்டித்துள்ளாரே?
பதில்: அவர் எங்களுக்கு வழி காட்டி அல்ல.
கேள்வி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் விமர்சித்துள்ளாரே?
பதில்: அவரிடம் பாடம் கற்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் அல்ல என்றார்.
லாரி, டேங்கர், டிப்பர், வேன் உரிமையாளர்கள் இன்று தங்கள் வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.