கனரக வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு நாள் கட்டாய பயிற்சி
சென்னை: கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்தை புதுப்பிக்கும் (licence renewal) முன் ஒரு நாள் கட்டாய சிறப்பு பயிற்சி பெற வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த பயிற்சி கட்டாயமாக்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் நாராயணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் விபத்து எண்ணிக்கையினை குறைக்கும் பொருட்டு, கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியளிப்பது அவசியம் என அரசு கருதுகிறது.
இதனால் கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்தை (லைசென்ஸ்) புதுப்பிக்கும்போது ஒருநாள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியை உரிமம் புதுப்பிப்பதற்கான தேதிக்கு முந்தைய 6 மாத காலத்துக்குள் பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுனர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சியை தரமணி சாலைப் போக்குவரத்து நிறுவனம் உருவாக்கும்.
போக்குவரத்து ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மட்டுமே மேற்கண்ட பயிற்சியை அளித்து சான்றுகளை வழங்கும்.
இந்த நடைமுறை வரும் 1.10.2008 முதல் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.