மேல் படிப்புக்கு ஏங்கும் பார்வைற்ற மாணவர் ஆனந்த்!
தூத்துக்குடி:பார்வை பறி போனால் என்ன, கல்விக் கண் இருக்கிறதே என்ற உத்வேகத்துடன் பிளஸ்டூவில் நன்கு படித்து, 1,047 மதிப்பெண் பெற்றும், வறுமையால் மேல் படிப்புக்கு போக முடியுமா, முடியாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஆனந்த்.
இவர் குறித்த செய்தியை நாம் நேற்று வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு பல வாசகர்களும் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர். அவரது முகவரியைக் கேட்டு இ-மெயில்கள் அனுப்பி வருவதோடு, நம்மை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இதோ ஆனந்த்தின் முகவரி..
P. ஆனந்த்
S/o. பெரிய இசக்கி
4/55, வடக்கு வீதி
சாத்தான்குளம்
தூத்துக்குடி மாவட்டம்.
தொலைபேசி எண்- 97889 32686
ஆனந்தின் சோக நிலை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் பெரியஇசக்கி. இவரது மகன் பி.ஆனந்த். ஆனந்துக்கு 5 வயது இருக்கும்போது அவருக்கு திடீரென்று கண்பார்வை பறிபோனது.
பார்வையற்ற நிலையிலும் அவர் ஆர்வமாக பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். தற்போது பிளஸ்டூ முடித்துள்ள ஆனந்த் 1047 மார்க் பெற்று பார்வையற்ற மாணவர்களில் மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.
10ம் வகுப்பு தேர்வில் இவர் 447 மார்க் எடுத்தார்.
ஏழ்மை..:
தந்தை பெரியஇசக்கி சென்னையில் பீங்கான் கடையில் வேலை செய்து வருகிறார். அண்ணன் மாடசாமி சென்னையில் வேன் டிரைவராக உள்ளார். இவர்களால் ஆனந்தின் படிப்புக்கு போதிய அளவு உதவ முடியவில்லை. ஏழ்மையிலும் சாதித்த ஆனந்த், சர்க்கரை வியாதி காரணமாக அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலையில் உள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக ஆசைப்படும் ஆனந்தின் மேற்படிப்பு கனவாக உள்ளது. கல்வி கற்க அதிக ஆர்வம் இருந்தும் குடும்ப சூழ்நிலை ஆனந்தை கலங்க செய்துள்ளது.
குடும்ப பொருளாதாரம் கை கொடுக்காத நிலையில் ஆசிரியர் பயிற்சியாவது படிக்க வேண்டும் என்ற ஆவல் ஆனந்திற்கு உள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், சிறுவயதிலேயே பார்வையை இழந்தாலும் தொடர்ந்து படித்து வருகிறேன். பிளஸ்டு முடித்துள்ள எனக்கு மேற்படிப்பு படிக்க பொருளாதார நிலை கஷ்டமாக உள்ளது. மாநில அரசு இதற்கு உதவ வேண்டும் என்றார்.
தற்போது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்துள்ளார் ஆனந்த். இதற்காகும் செலவை நினைத்து கலங்கிப் போயுள்ளது ஆனந்த்தின் குடும்பம்.
ஆனந்த் குறித்த இந்த செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு பல நல்ல உள்ளங்கள் ஆனந்த்துக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பது தான் மிக மகிழ்ச்சியான செய்தி.
உதவ நினைப்போர் மேலே கூறியுள்ள முகவரியில் அவரை தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்,
ஏ.கே.கான்,
ஆசிரியர்,
தட்ஸ்தமிழ்.காம்
வறுமையால் மேற்படிப்புக்கு ஏங்கும் பார்வையற்ற மாணவர்