விடுதியில் இடமில்லை-திருப்பதியில் பக்தர்கள் சாலை மறியல்
திருப்பதி: திருப்பதியில் விடுதிகளில் இடம் கிடைக்காததால் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு போதுமான விடுதிகள் இல்லை.
விடுதி வசதிகளை தேவஸ்தானம் விரிவாக்கி வந்தாலும் பக்தர் கூட்டம் அதைவிட அதிகரித்து வருகிறது. இந் நிலையில் நேற்று திருப்பதி தேவஸ்தான விடுதி முன் பதிவு மையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.
அவர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் தற்போது விடுதியில் இடம் இல்லை. இங்கு காத்திருக்க வேண்டாம் என்று கூறவே அவர்கள் கோபமடைந்தனர்.
அவர்கள் திருப்பதி-திருமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி எர்ரம் ரெட்டி, கண்காணிப்பு அதிகாரி ரமணா ஆகியோர் விரைந்து வந்து பக்தர்களை சமாதானப்படுத்தி, நிலைமையை விளக்கினர்.
இதையடுத்தே பக்தர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் திருமலையில் பரபரப்பு நிலவியது.