விஜயன் கொலை- 'கூலிப்படை' கார் டிரைவர் கைது?
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 4ம் தேதி இரவு கோட்டூர்புரம் ரோட்டில் விஜயன் கொலை செய்யப்பட்டார். பின்னால் வந்த ஒரு கார் இவரது காரின் மீது மோதியது. பின்னர் அதில் இருந்தவர்கள் இறங்கி வந்து விஜயனை கொலை செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக தென் சென்னை இணை கமிஷனர் துரைராஜ், துணை கமிஷனர் மவுரியா ஆகியோரி்ன் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
விஜயனுக்கும், அவரது மனைவி சுதாவின் அக்காள் லதாவின் கணவர் ராஜேந்திரனுக்கும் இடையே எம்ஜிஆரின் சொத்துக்களை நிர்வகிப்பதில் தகராறு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ராஜேந்திரன், லதா, அவர்களது மகன் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் கொலை நடந்த இடத்தில் நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விஜயனின் கார் மீது மோதிய காரை ஓட்டி வந்த டிரைவரை தனிப்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.
இவரது பெயர் சுந்தரவேல் என்று கூறப்படுகிறது. இந்தக் கைது குறித்து போலீசார் இன்னும் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றாலும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இவரது தலைமையில் வந்த கூலிப் படை தான் விஜயனைக் கொன்றதாக தெரிய வந்துள்ளது. இவரை அனுப்பியது யார் என்று விசாரணை நடக்கிறது.
இந்த வழக்கில் ராஜேந்திரன், குமார், லதா ஆகியோர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.