இந்தியா-பாக். பிரிவினையை முஸ்லீம்கள் விரும்பவில்லை: அன்சாரி
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை முஸ்லீம்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் உருவாகும் என அவர்கள் அஞ்சினர் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.
சிவில் விடுதலை அமைப்பைச் சேர்ந்த பல்ராஜ் பூரி, முஸ்லீம்ஸ் ஆஃப் இந்தியா சின்ஸ் பார்ட்டிசன் என்கிற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்ட ஹமீத் அன்சாரி நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 1947ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்தபோது அதை முஸ்லீம்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதனால் பல பிரச்சினைகள் உருவாகும் என்று அவர்கள் அஞ்சினர்.
பல முஸ்லீம் அறிஞர்கள், பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டனர். ஜின்னாவின் இரு நாடு கொள்கையை அவர்கள் ஏற்கவில்லை.
பாகிஸ்தான் வருமாறு எனது தந்தைக்கும் ஜின்னா அழைப்பு விடுத்தார். ஆனால் அதை எனது தந்தை ஏற்கவில்லை. இந்திய மக்களுக்காக உழைக்க தான் விரும்புவதாக கூறி விட்டார் என்றார் அன்சாரி.