சென்னை: ரூ.2000 கோடியில் மோசர் பேயர் ஹார்ட்வேர் தொழிற்சாலை
சென்னை: சென்னை அருகே ஒரகடத்தில் ரூ. 2,000 கோடி முதலீட்டில் சிலிகான் அடிப்படையிலான போட்டோ வோல்டிக் செல்கள், மெமரி சிப்ஸ் போன்றவைகளையும் தயாரிக்கும் தொழிற்சாலையை மோசர் பேயர் அமைக்கவுள்ளது. இதன் மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் கருணாநிதி முன் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மெமரி சிப்ஸ், யு.பி.எஸ். டிரைவ்ஸ் போன்ற பொருள்களின் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான மோசர் பேயர்
போட்டோ வோல்டிக், நானோ தொழில்நுட்பம், செமி கண்டக்டர்ஸ், மற்றும் பொழுதுபோக்குத் தொழில் சாதனங்கள் முதலியவற்றின் ஆராய்ச்சிகளிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
சென்னைக்கு அருகே ஒரகடம் சிப்காட் உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சிலிகான் அடிப்படையிலான போட்டோ வோல்டிக் செல்கள், மெமரி சிப்ஸ் போன்றவைகளையும் தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ. 2,000 கோடி முதலீட்டில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
இத்தொழிற்சாலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கனவே சிக்னட் சோலார் நிறுவனத்துடன் ரூ. 2,000 கோடி முதலீட்டில் சிலிக்கான் அடிப்படையில் மெல்லிய போட்டோ வோல்டிக் பொருள்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
அதே வசதியுடன் மோசர் பேயர் தொழிற்சாலையும் அமைவதன் மூலம் சென்னை, ஹார்ட்வேர் தயாரிப்பு மற்றும் போட்டோ வோல்டி பொருள்கள் தயாரிப்பில் முக்கிய மையமாக உருவெடுக்கவுள்ளது.
இத்தொழிற்சாலையை அமைப்பதற்காக, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அரசின் சார்பில் தொழில்துறைச் செயலாளர் எம்.எஃப்.பரூக்கி, மோசர் பேயர் இந்தியா தொழிற்சாலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநன தீபக் பூரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும் உடனிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.