நாட்டில் பாஜக அலை வீசுகிறது-நாயுடு
ராமநாதபுரத்தில் பாஜக ரத யாத்திரை நிறைவு விழா மாநிலத் தலைவர் இல. கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய நாயுடு,
ராமர் இருக்கிறாரா, அவரது முகவரி என்ன என்று தமிழக முதல்வர் கேட்கிறார். ஆனால் கருணாநிதியின் தலைவர் பெரியாரின் பெயரே ஈ.வெ.ராமசாமி தான். இதை கருணாநிதி உணர வேண்டும். ராமர் இல்லை என்றால் அந்த பெயர் அவருக்கு எப்படி வந்தது. இதற்கு கருணாநிதி பதில் சொல்வாரா?.
பாஜக, சேது திட்டத்திற்கு எதிரான கட்சி அல்ல. ஆனால் ராமர் பாலத்தை தகர்ப்பதை தான் எதிர்கிறோம். என்ன விலை கொடுத்தாவது ராமர் பாலத்தை பாதுகாப்போம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் மாற்று வழியில் இந்த தி்ட்டத்தை செயல்படுத்துவோம்.
கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு நடந்த தேர்தலில் 12 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. 9 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தற்போது, மக்களிடம் பாஜக அலை வீசுகிறது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து வருகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, இனி எந்த காந்தி வந்தாலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது என்றார்.