தேமுதிகவுடன் கூட்டணியா? தவறில்லை என்கிறார் சரத்
சென்னையில் இன்று செய்தியாளர்களர்களைச் சந்தித்தார் சரத்குமார். அவர் கூறுகையில், விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) மெமோரியல் ஹால் அருகே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறிய முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், இத்திட்டம் 2012ல் தான் முடிவடையும் என்று ஒரு கால அட்டவணை கொடுத்துள்ளார். இந்த கால அட்டவணையை கர்நாடகாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னரே கொடுத்திருக்க வேண்டியதுதானே?
இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கருதிதான் கலையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது இத்திட்டம் நிறைவேற முதலமைச்சர் கால அட்டவணை கொடுத்திருப்பதை பார்க்கும் போது திட்டம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருணாநிதி விலக வேண்டும்:
கலையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோதே 2012ல்தான் ஓகேனக்கல் திட்டம் முடிவடையும்; நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் இப்போது திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்வது நல்லது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. எம்ஜிஆரின் உறவினர் விஜயன் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து வெளியே செல்லும் கணவர் உயிரோடு வீடு திரும்புவாரா என்று மனைவி கவலைப்படும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளும் உயர்ந்து விட்டன.
விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு இலவச திட்டங்களை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்து அதற்காக செலவழிக்கப்படும் தொகையை கொண்டு விலை உயர்வை சமாளிக்கலாமே.
மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிப்பதற்கு மது, பான்பராக், சிகரெட் ஆகியவற்றின் மீது வரிவிதித்து அதனால் கிடைக்கும் தொகையை கொண்டு விலை உயர்வை ஈடுகட்டி இருக்கலாம்.
திரைப்படங்களில் சிகரெட் பிடிக்க மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு காட்டி வருகிறார். திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை பார்த்துதான் மற்றவர்களும் சிகரெட் பிடிக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கார்த்திக்குடன் பேசினேன்:
நடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கி என்னுடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக சொல்கிறீர்கள். கார்த்திக் என்னுடைய இனிய நண்பர். அவரும், நானும் விமானத்தில் வரும்போது இது தொடர்பாக பேசியது உண்மை.
நல்லெண்ணம் உள்ளவர்கள் மாற்றத்தை நோக்கி செல்ல ஒன்றாக பணியாற்றுவதில் தவறில்லை. இப்போதுள்ள ஆட்சியாளர்களுடன் கூட்டணி வைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியாது.
விஜயகாந்த்துடன் பேசுவேன்:
தமிழகத்தில் சிறந்த மாற்றம் வர வேண்டும்; மக்களுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்களும், ஒத்த கருத்து உள்ளவர்களும் சேருவதில் தவறில்லை. இது தொடர்பாக பேச வேண்டிய நேரம் வந்தால் நண்பர் விஜயகாந்துடன் கண்டிப்பாக பேசுவேன்.
நண்பர் விஜயகாந்தும், நானும் நடிகர் சங்கத்தில் இருக்கும்போது ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டோம் என்றார் சரத்குமார்.