ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்தில் புதிய 'டவுன்ஷிப்'
ஜெயங்கொண்டம்: நெய்வேலி அனல் மின் நிலையத்தையொட்டி தனி நகரியம் (டவுன்ஷிப்) அமைக்கப்பட்டது போல ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையப் பகுதியும் தனி நகரியமாக மாற்றப்படும் என மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் இந்தியன் வங்கியின் 1,547வது கிளையை தொடங்கி வைத்து ராசா பேசுகையில், என்.எல்.சி. நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு நடைபெறும்.
இந்த புதிய நகரியம் மூலம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகள் பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சியை எட்டும். ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டம் குறித்து சென்னையில் அடுத்த வாரம் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, என்.எல்.சியும், மாநில அரசும் வீடுகள் கட்டித்தரும். பொருத்தமான வேலைகளையும் அளிக்கும் என்றார்.