ரயில்வே ஊழியரின் துரித செயல்-பெரும் விபத்து தவிர்ப்பு
கரூர்: கரூர் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இது குறித்து ரயில்வே ஊழியர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தந்ததால் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கரூர்-திருச்சி இடையே சானபிராட்டி கிராமம் அருகே வழக்கமான தண்டவாள சோதனையில் ரயில்வே ஊழியரான பழனிச்சாமி ஈடுபட்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் மேலே சென்றே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து கீழே கிடப்பதைக் கண்டு திடு்க்கிட்டார்.
இதையடுத்து உடனடியாக கரூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தந்து கொண்டிருந்தபோதே கரூர்-திருச்சி பாசஞ்சர் ரயில் வருவதைக் கண்டார்.
உடனடியாக சிவப்பு கொடியுடன் ரயிலை நோக்கி ஓடினார். இதைக் கண்ட ரயிலின் டிரைவர் அதை உடனே நிறுத்தினார். இதனால் அந்த மின் கம்பிக்கு 400 மீ்ட்டர் தொலைவிலேயே ரயில் நின்றுவிட்டது.
அந்த மின்கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், ரயிலை நிறுத்தியதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து தமிழக மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்து கம்பியை அகற்றினர். இதையடுத்தே அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து சீரானது.