என்எல்சி ஸ்டிரைக் தீவிரம்-மின் வினியோகம் பாதிக்கும்
நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்துள்ளது. நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் பெருமளவில் மின்தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
என்.எல்.சியில் வேலை பார்த்து வரும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும்
களத்தில் இறங்கியுள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் என்.எல்.சி. மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இருப்பு குறையத் தொடங்கியுள்ளதே. நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் பெரும்பாலும் ஒப்பந்த ஊழியர்கள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஸ்டிரைக் காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்பும் குறையத் தொடங்கியுள்ளதால், தற்போது 880 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தினசரி 3 மின் நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். தற்போது அதில் 880 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது.
ஸ்டிரைக் தவிர முதல் மின் நிலையத்திற்கு பழுப்பு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அரை கிலோமீட்டர் அளவுக்கு அறுந்து விட்டது.
அதேபோல 2வது அனல் மின் நிலையத்தில் மின்சார கேபிள் தீப்பிடித்து எரிந்து விட்டது. இதனால் இருமின் நிலையங்களிலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
ஸ்டிரைக் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அடுத்தகட்டமாக சிறை நிரப்பும் போராட்டத்தை ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர். எனவே மின் உற்பத்தி மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது. அப்படிக் குறைந்தால் அது தென் மாவட்டங்களுக்கான மின் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய அரசு தலையிடுகிறது:
இந் நிலையில் என்.எல்.சி. நிறுவன ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் டெல்லிக்கு அழைத்துப் பேச மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பொகார்டியா ஏற்பாடு செய்துள்ளார்.
ஜூன் 13ம் தேதி டெல்லியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு என்.எல்.சி.நிறுவன அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் வேண்டுகோளின் பேரில் இந்த கூட்டத்திற்கு பொகார்டியா ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயலுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.