அடாவடி ஐசிஐசிஐ: போலீஸின் மெளனம்-நோட்டீஸ்
சென்னை: பெர்சனல் கடன் வாங்கியவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதோடு, அடாவடியாக வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அபகரித்துச் செல்ல முயன்ற வங்கிக்கும், இதுதொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் தனி நபர் கடன் கோரி விண்ணப்பித்தேன். அதே ஆண்டு அக்டோபர் 5ம் தேதி எனக்கு ரூ. 2.61 லட்சம் ஒதுக்கப்படுவதாக கடிதம் வந்தது.
இருப்பினும் ரூ. 1.5 லட்சத்தை மட்டுமே என்னிடம் வழங்கினர். மீதுள்ள ரூ.1.1 லட்சத்தை வழங்கமல் அவர்களே வைத்துக் கொண்டனர்.
எனது கடனை நான் 36 மாதங்களில் மாதம் ரூ.9,438 என்கிற தவணையில், ஈசிஎஸ் மூலம் செலுத்த வேண்டும்.
மீதமுள்ள ரூ. 1.1 லட்சத்தை வழங்கக் கோரி நான் பல முறை நான் வங்கியை அணுகியும் அவர்கள் தரவில்லை. கடன் தவணையைக் கட்டியது தொடர்பான அறிக்கையையும் அவர்கள் வழங்கவில்லை.
இந்தநிலையில் நான் வீட்டில் இல்லாத போது வங்கியின் கலக்ஷன் ஏஜென்டுகள் சிலர் வந்து அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க முயன்றுள்ளனர்.
இதுதொடர்பாக மே 8ம் தேதி நான் வங்கியில் புகார் செய்தேன். இருப்பினும் கலக்ஷன் ஏஜென்டுகள் தினசரி வீட்டுக்கு வருவதும், மிரட்டுவதுமாக உள்ளனர்.
மே 10ம் தேதி இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வங்கி அதிகாரிகளோ, அவர்களின் பிரதிநிதிகளோ அல்லது யாருமோ எனது வீட்டிற்கு வரக் கூடாது என தடை விதிக்க வேண்டும். எனது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ரவி.
இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி ஏ.சி. ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், இதுதொடர்பாக வங்கிக்கும், மாநகர காவல்துறை ஆணையருக்கும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.