காட்டுப் பங்களாவுக்குப் போகும் ஞானேந்திரா!
நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து, நேபாளம் குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரண்மனையை விட்டு வெளியேறுமாறும் மன்னர் ஞானேந்திராவுக்கு மாவோயிஸ்ட்கள் கெடு விதித்தனர்.
கடும் நெருக்கடிகளைத் தொடர்ந்து அரண்மனையை விட்டு வெளியேற ஞானேந்திரா முடிவு செய்தார். அதன் படி இன்று மாலை பாரம்பரியம் மிக்க நாராயன்ஹிதி அரண்மனையை காலி செய்கிறார்.
அங்கிருந்து வனப் பகுதியில் உள்ள நாகார்ஜூனா மாளிகைக்கு அவர் செல்கிறார். அங்கு குடும்பத்துடன் தங்கவுள்ளார்.
இந்த மாளிகையும் கிட்டத்தட்ட ஒரு அரண்மனையைப் போன்றே உள்ளது. மொத்தம் பத்து கட்டடங்கள் இதன் வளாகத்தில் உள்ளது. அதில் முன்னாள் மன்னர்களுக்கான குடியிருப்பு, 3 விருந்தினர் இல்லங்கள், ஒரு அலுவலகம், ஒரு அலுவலர் குடியிருப்பு ஆகியவை உள்ளன.
தலைநகர் காத்மாண்டுவுக்கு வெளியே இயற்கை எழில் கொஞ்சும் வனப் பகுதியில் இந்த பங்களா உள்ளது.
அரண்மனையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, மாலை 5 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ஞானேந்திரா. அப்போது தனது தரப்பு நிலை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கவுள்ளார்.
ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறுவதை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலா, பிரதமர் கொய்ராலாவை இன்றுகாலை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது, நேபாள ராணுவத் தலைமைத் தளபதி ரூக்மாங்கத் கத்வால், நேபாள போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஞானேந்திரா குடியேறவுள்ள புதிய பங்களாவின் பாதுகாப்பு நிலை, அவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.