For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தசாவதாரம் நாளை ரிலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: தசாவதாரம் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உலகெங்கும் நாளை தசாவதாரம் திட்டமிட்டபடி திரையிடப்படுகிறது.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பிரமாண்டப் படமான தசாவதாரம் நாளை உலகெங்கும் ரிலீஸாகிறது. இப்படத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அனைத்தையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில், சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சனாதன் கழகம் என்கிற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், சைவ-வைணவ பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் படம் இருப்பதாகவும், எனவே தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் அரிஜித் பசாயத், நவ்லோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை செய்தது. பின்னர் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், மனுதாரர் முதலில் படத்தைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பே படத்தைத் தடை செய்யக் கோருவது சரியல்ல என்று கூறினர்.

நாளை ரிலீஸ்:

தசாவதாரம் படத்திற்கு இருந்து வந்த கடைசித் தடையும் தற்போது நீங்கி விட்டது. இதன் மூலம் தசாவதாரம் படத்தை திரையிடுவதற்கு தற்போது எந்தத் தடையும் இல்லை.

ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள தசாவதாரம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. ஒரு நடிகர் 10 வேடங்களில் நடித்திருப்பது உலக சினிமாவில் இதுவே முதல் முறையாகும்.

இதுவரை இந்த சாதனையை வைத்திருந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மட்டுமே. நவராத்திரியில் அவர் 9 வேடங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசன் தற்போது அந்த சாதனையை முறியடிக்கிறார்.

இதேபோல ஹாலிவுட்டைச் சேர்ந்த அலெக் கின்னஸ் என்பவர் 40களின் பின்பு வந்த கைண்ட் ஹார்ட்ஸ் அன்ட் கொரோனட்ஸ் என்ற படத்தில் 8 வேடம் போட்டிருந்தார்.

இத்தனை சாதனைகளையும் கமல்ஹாசன் முறியடித்து புதிய உலக சாதனை படைத்து, உலக நாயகன் என்பதை நிரூபித்துள்ளார்.

விழாக்கோலம்:

தசாவதாரம் படத்திற்காக 1000 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. உலகெங்கும் நாளை படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் தசாவதாரம் படம் 21 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுவும் ஒரு புதிய சாதனை. இதற்கு முன்பு சிவாஜிதான் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது அதை தசாவதாரம் முறியடிக்கிறது.

அனைத்து தியேட்டர்களிலும் திருவிழாக்கோலமாக காணப்படுகிறது. இந்தத் தியேட்டர்களில் ஒரு நாளைக்கு 165 காட்சிகள் காட்டப்படவுள்ளன. அதில், மாயாஜால் வளாகத்தில் மட்டும் மொத்தம் 45 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

டிக்கெட்டுக்கு கடும் 'டிமாண்ட்'?:

இதற்கிடையே, தசாவதாரம் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்யச் செல்லும் ரசிகர்களுக்கு, 3 நாட்களுக்கு டிக்கெட் கிடையாது என்ற பதிலைத் தருகின்றனவாம் சென்னை தியேட்டர்கள்.

ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலேயே அனைத்து டிக்கெட்டுகளையும் முதல் மூன்று நாட்களுக்கு புக் செய்து விட்டதாக ஒரு பேச்சு நிலவுகிறது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X